தில்லியில் போராடும் விவசாயிகள் ஒப்பந்த சாகுபடி சட்டம், வேளாண் விளை பொருட்கள் விற்பனைசட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யவேண்டுமென “36” நாட்களாக தொடர் போராட்டம் நடத்துகிறார்கள். தற்பொழுது பிரதமர் மோடி, வேளாண்மைதுறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் “குறைந்த பட்ச ஆதரவு விலை” வழங்க எழுத்துப் பூர்வமான உத்தரவாதம் அளிப்பதாக கூறுகின்றனர்.
சட்டப்பூர்வமான குறைந்த பட்ச விலை அமலான விதம்
இந்தியாவின் வேளாண் சார்ந்த பிரதான பெரிய தொழில் ஜவுளியும், சர்க்கரை உற்பத்தி தொழிலும் தான். சர்க்கரை உற்பத்திக்கான கச்சா பொருள் கரும்புக்கு “சட்டப்படியான குறைந்தபட்ச விலை (SMP- Statutory Minimum Price ) கரும்பு கட்டுப்பாட்டுச் சட்டம் 1965 மூலம்உறுதிப்படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டது. இந்த SMP கரும்பு விலை “8.5” சர்க்கரை சத்து என்ற முறையில்மத்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கும் சர்க்கரை கட்டுமானம் கூடுதலாவதற்கு தகுந்தாற் போல் சர்க்கரை ஆலைகள் கூடுதலாக கரும்பு விலை சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் விவசாயிகளுக்கு வழங்கி வந்தன.
வடமாநிலங்களில் குறிப்பாக தெற்கு மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா பகுதிகளில் விளையும் கரும்பு சர்க்கரை கட்டுமானம் அதிகம் இருந்ததால் ஓரளவு கூடுதல் விலைவிவசாயிகள் பெற்று வந்தார்கள். தமிழகத்தில் சராசரிமகசூல் கூடுதல் பெறுவதற்கு சாகுபடி செலவு கூடுதலாக இருப்பதை சுட்டிக் காண்பித்து போராடியதன் விளைவாக “மாநில அரசு ஆதரவு விலை என (State advisory Price)”ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசால் அறிவிக்கப்பட்டு சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் விவசாயிகளுக்கு வழங்கி வந்தது. விவசாயிகள் ஒப்பந்தம் செய்யும் கரும்புக்கு சட்டப்பூர்வமான குறைந்தபட்ச விலை, மாநில அரசின் பரிந்துரைவிலை (SMP+ SAP) வழங்க கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்களுக்கு வரையறுக்கப்பட்டஎல்லை (area Demarcation) அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாக மாவட்ட அளவிலான எல்லைகள் இருந்தாலும் சர்க்கரை ஆலைகள் கூடுதலாக நிறுவப்பட்டதால் 15 கி.மீ எல்லை என்ற நிலை வரை சுருக்கப்பட்டது. குறிப்பிட்ட தாலுகா, பிர்கா, வருவாய் கிராமங்கள் என்ற நிலை வரை தற்போது உள்ளது. இந்த எல்லைவரையறையை நீக்கிவிட வேண்டுமென்ற மத்திய அரசின்ஆலோசனை வலுவான எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.
சட்டம் , மாநில அரசின் ஆதரவு, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை, கூட்டுறவு துறை நிறுவனங்கள், எல்லை வரையறை இத்தனை இருந்தும் பரிந்துரை விலையை கரும்பு விவசாயிகள் பெறுவது பெரும் சவாலாகதொடர்ந்து இருந்து வருகிறது. தற்பொழுது “ரூபாய் 3 ஆயிரம் கோடி” “8 ஆயிரம் கோடி” என்ற அளவில் கரும்பு கிரயத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.1983 ம் ஆண்டு சட்டப்படியான குறைந்த பட்ச விலை (SMP) மட்டுமே வழங்க முடியும் எனவும் (SAP) மாநில அரசின் ஆதரவு விலை வழங்க முடியாது எனவும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அருணா சர்க்கரை ஆலை நிர்வாகம் (தற்பொழுது அம்பிகா சர்க்கரை ஆலை) அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சியர் “சந்திரலேகா” தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியும் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம்வழங்க மறுத்தது. ஆந்த ஆலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டகரும்புகளை அருகில் உள்ள மாநில அரசின் பொதுத்துறைநிறுவனமான பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு அனுப்பஏற்பாடு செய்யப்பட்டு கரும்புகள் சில நாட்கள் அனுப்பப்பட்ட பின்னர் அருணா சர்க்கரை ஆலை நிர்வாகம் மாநிலஅரசின் பரிந்துரை விலையை வழங்க வேண்டிய நிர்பந்தம்ஏற்பட்டது.
எம்எஸ்பி -அமல்படுத்துவதில் தொழில் நுட்பரீதியான இடையூறுகள்
வெப்பப்பகுதி, மித வெப்பப்பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாட்டில் கரும்பில் சர்க்கரை கட்டுமானம் 8.5 லிருந்து 10 சதவீதத்திற்கு மேல் வராது என்ற நிலையில் இருந்து (1டன் கரும்பு 85 கிலோ முதல் 100 கிலோ சர்க்கரை வரை) மாநில பொதுத்துறை சர்க்கரை ஆலை துவங்கப்பட்ட பின்12 சதவீதம் சர்க்கரை கட்டுமானம் அதாவது 1 டன் கரும்புக்கு120 கிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலை உயர்தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்டது.சர்க்கரை கட்டுமானம் என்ற அடிப்படையில் கரும்புவிலை நிர்ணயம் செய்யப்படுவதால் தனியார் சர்க்கரைஆலை நிர்வாகங்களுக்கு சற்று கூடுதலாக விவசாயிகளுக்கு விலை வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மேலும் எக்சைஸ்வரி, செஸ்வரி அரசிற்கு செலுத்த வேண்டிய நிர்வாகங்களின் கொள்ளை லாபத்தில் சற்று குறைவு ஏற்பட்டது. அரசின் சட்டப்படியான விலை பெறுவது விவசாயிகளுக்கு சவாலாகவே இருந்து வருகிறது.
மத்திய அரசு கூறும் தற்போதைய எம்எஸ்பி அமலாக என்ன உத்தரவாதம்?
கரும்புக்கு உத்தரவாதமான சட்டப்படியான குறைந்தபட்ச விலை, மத்திய அரசு விலை நிர்ணயம் செய்வதன் பின்னணியில் தான் கோதுமைக்கு, நெல்லுக்கு இதர வேளாண் விளை பொருட்களுக்கு “குறைந்தபட்ச ஆதரவு விலை” நிர்ணயிக்கும் நடைமுறை உள்ளது. அரசு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மத்திய உணவுக்கழகம் தமிழ் நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மற்றும் சில ஏஜென்சிகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்வதும் நடைமுறையில் உள்ளது. இவைஅனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் அரசின் கண்காணிப்பில் உள்ளது. உணவுப் பாதுகாப்பு என்பது ஓரளவு உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகளை “3” வேளாண் சட்டங்களும் சிதைந்து விடும். அரசு நிர்ணயிக்கும் குறைந்த பட்ச ஆதரவுவிலைக்கு கார்ப்பரேட் நிறுவனம் கொள்முதல் செய்யும் என்ற கட்டாயம் இல்லை.கரும்பு விவசாயிகளுக்கு கரும்பிற்கான சட்டப்படியான விலை என்பது கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலை. தற்போது மத்திய அரசு சில ஆண்டுகளாக “நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை” என்ற முறையில் விவசாயிகளிடம் கரும்பு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. சட்டப்படியான குறைந்தபட்ச விலை (SMP) மாநில அரசின் பரிந்துரை விலை (SAP) என்பது கானல் நீராகிவிட்டது. 8.5 சதவீத சர்க்கரை கட்டுமானம் 10 சதவீதம் என மாற்றப்பட்டுவிட்டது.இதுபோன்ற கரும்பு விலை நிர்ணயம் செய்வதில் விவசாயிகளுக்கு பாதகமான நிலையிலும், கரும்பு கிரையத்தொகை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ளது.
தனியார் நிறுவனங்கள் செய்யும் மோசடிகள்
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு சர்க்கரை ஆலை நிர்வாகம் திரும்பச்செலுத்தாத மோசடியும் நடந்தது. விவசாயிகள் ஏமாற்றப்பட்டார்கள். இதுபோன்ற சில தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்களில் நடந்தது.பல்வேறு குளறுபடியால் புகலூர் பெட்டவாய்த்தலை, அறந்தாங்கி, அண்டக்குடி. பெண்ணாடம் இன்னும் பலசர்க்கரை ஆலைகள் இயங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 500 முதல் 1000 கோடி ரூபாய் முதலீட்டிற்கு உட்பட்டமீடியம் ஸ்கேல் இண்டஸ்ட்ரி என்ற நிர்வாக அமைப்பையே கேள்வி கேட்க முடியாத விவசாயிகள் பெரிய அளவில் முதலீடு செய்யக்கூடிய கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயிகள் மத்திய அரசு அறிவிப்பதாக கூறும் “குறைந்தபட்ச ஆதரவு விலையை” எவ்வாறு பெறமுடியும்? அதற்கான சட்ட நிலை என்ன? தற்போதைய வடிவம் கீழ்மட்ட அரசு அதிகாரிகள் சமரசம் பேசும் நிலைதான்.
ஆலை நிர்வாகம் ஒப்பந்தப்படி கரும்பு எடுத்துக் கொள்வதற்கும் சட்டப்படியான விலை வழங்குவதற்கும் கரும்பு கிரையத் தொகை தாமதமானால் வட்டியுடன் தொகை வழங்குவதற்கும் விவசாயி நுகர்வோர் நீதிமன்றத்தை அனுகியதில், இதில் “ நுகர்வோர் சர்க்கரை ஆலை நிர்வாகம்” என்றும் “விவசாயி உற்பத்தியாளர்” என்றும் உறுதி செய்தது.மேலே குறிப்பிட்ட விபரம் ஒரே ஒரு பாரம்பரியமிக்க பிரதான விளை பொருளான கரும்பு மட்டும். “ஒப்பந்த சாகுபடி முறை” “சட்டப்படியான விலை உத்தரவாதம்” என்றவிளை பொருளுக்கே இந்த நிலை என்றால் மற்ற விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைஎன்னவாகும். ஆகவே தான் தற்போதைய “3” சட்டத்தையும்ரத்து செய்ய வேண்டுமென உறுதியாக விவசாயிகள் போராடுகிறார்கள்.
சாத்தியமான மாற்று
நவீன உலகமயம், தாராள மயம், தனியார் மயம் என்ற அரசின் கொள்கையின் ஒரு பகுதியாகத்தான் வேளாண்மைத் துறையிலும் அரசு இந்த “3” சட்டங்களை அவசரகதியாக நிறைவேற்றியுள்ளது.இந்தியா, வேளாண்மை உற்பத்தியில் தன்னிறைவு பெற்று உபரி நிலையை எட்டியுள்ளது. ஆகவே இப்படியான சட்டத்தை அமல்படுத்துவது கட்டாயம் என்ற விவாதம்முன் வைக்கப்படுகிறது.ஏற்கனவே “தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்” உள்ளிட்ட அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் விவசாய விளை பொருட்களை பண்ணை அளவிலும் பகுதி அளவிலும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி கூடுதல் விலை பெறமுயற்சி மேற் கொள்ளப்பட்டு அமலாகி வருகிறது. இதைகூட்டுறவு அமைப்புகள் மூலமாக மேலும் விரிவுபடுத்தமுடியும். விவசாயியும், முன்பு வெல்ல வியாபாரியுமான தமிழக முதல்வரும் (சர்க்கரை என்ற புனைப்பெயர் அவருக்கு இருப்பதாக பத்திரிகை செய்தி) முருங்கை இலையிலிருந்து பவுடர் தயாரிப்பது, பழங்களிலிருந்து ஜூஸ் தயாரிப்பது, தரம்பிரித்து கூடுதல் விலைக்கு விற்பது என்று அரசுவிளம்பரங்கள் மூலம் அரசின் சாதனையாக சொல்லி வருகிறார். மஞ்சள் பொடி, மசாலா பொடி, நெல்லி ஜூஸ், இளநீர் பாக்கெட் இது போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி கூடுதல் விலை பெறுவது அந்தந்த பகுதியிலேயே நடைபெற்று வருகிறது. கூட்டுறவு அமைப்புகள் மூலம் மேலும் வலுப்படுத்த முடியும். கேரள அரசாங்கம் இதை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன் மூலம் உற்பத்தியில் தன்னிறைவு, உபரி என்ற நிலையை இந்தியாவில் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி முன்னேற்ற முடியும்.சேலம், நாமக்கல், ராசிபுரம் பகுதிகளை உள்ளடக்கியபழைய சேலம் மாவட்டத்தில் தற்பொழுதும் அப்பகுதியில் உற்பத்தியாகும் மரவள்ளி கிழங்கு மாவு, சேகோ கூட்டுறவு அமைப்பு, மக்காச்சோளம், மாட்டுத்தீவனம், கோழித்தீவனம் உற்பத்தியில், விவசாயி - வியாபாரியாகவும், வியாபாரி உற்பத்தியாளராகவும், உற்பத்தியாளர் விவசாயியாகவும், பின்னிப்பிணைந்து பிரிக்க முடியாத நிகழ்வாக தொடர்கிறது. இந்த முறையில் சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல. மாறாக இவை அனைத்தையும் பகாசுர கார்ப்பரேட் கையில் ஒப்படைத்தால் நிலைமை மோசமாக மாறும். “பிக்பாஸ் பார்த்தால் குடும்பம் சிதையும் என்று கூறும் நமது முதல்வர்,மேற்கு நாடுகள் இந்தியாவின் குடும்ப அமைப்பு முறையைமெச்சி புகழ்வது, விவசாயம் சார்ந்த குடும்ப முறைதான் அதற்கு அடித்தளம் என்பதை உணர்ந்து வேளாண் சட்டங்களை ரத்து செய்ய ஆதரவளிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தகாரணத்தினால் தான் கடுங்குளிரிலும் விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்துகிறார்கள். விவசாய சங்க தலைவர்களும், அறிவு ஜீவிகளும் , அரசியல் கட்சிகளும் போராட்டத்திற்கு ஆதரவாக கடந்த 28 நாட்களாக பல்வேறு வகையில் ஆதரவளித்து வருகிறார்கள். காலம் தாழ்ந்து போராடுகிறார்கள் என்ற கூற்றை பிரதமர் கைவிட்டு “3” சட்டங்களையும் ரத்து செய்து தேசம்காக்க வேண்டும்.சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் மாற்றுக்கான ஒன்றுபட்ட போராட்டத்தை விவசாயிகள் உறுதிப்படுத்துவது தான் தீர்வாக அமையும்.
கட்டுரையாளர் : சு.அழகர்சாமி, செயலாளர், திண்டுக்கல் மாவட்ட தென்னை மர தொழிலாளர் சங்கம்